கொஞ்சம் கனவு கொஞ்சம் கவிதை
கொஞ்சம் கனவு கொஞ்சம் கவிதை, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 75ரூ.
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன். இந்நூல் அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு. ‘பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திடச் சொன்னாயே பாரதி… நோட்டுத் திறமல்லவா இந்த நாட்டை நடத்துகிறது‘ என்று இன்றைய நாட்டு நடப்பைத் தோலுரித்துக் காட்டுகிறார்.
‘தேடுதல் இல்லா வாழ்க்கையில் யார்க்கும் தெய்வ தரிசனம் கிடைப்பதில்லை’ ‘விதைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். வருங்காலம் ஒரு விருட்சத்தை இழந்துவிடும்’ போன்றவை நெஞ்சில் விழிப்புணர்வை விதைக்கின்றன.
‘பிள்ளை மனமும் வள்ளல் குணமும்தான் எம்.ஜி.ஆரை. அடையாளம் காட்டும் பண்புகள்’ என்று எம்.ஜி.ஆர். குறித்தும், ‘ஏழையின் துணையாய் இருந்தவர் காமராஜர்’, ‘ஏழையாய் எப்போதும் இருந்தவர் காமராஜர்’ என்று காமராஜர் குறித்தும் அவர்களின் உயர் பண்புகளை உள்ளபடியே உரைக்கிறார்.
ஏர்வாடியாரின் கவிதைகளில் எளிமையையும், இனிமையையும், அழகும், உயிர்ப்பும் இருப்பதைக் காணலாம்.
நன்றி: தினத்தந்தி, 10/1/2018.