குடியேற்றம்
குடியேற்றம், தோப்பில் முஹம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், பக்.237,விலைரூ.275.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற தோப்பில் முஹம்மது மீரானின் ஆறாவது நாவல் இது. வரலாற்றின் கரிய பக்கங்களையும், அதனூடே இன்னமும் கசிந்து கொண்டிருக்கும் வலிகளையும் அச்சாரமாகக் கொண்டு இந்த நாவலைப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.
பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஏறத்தாழ 150 ஆண்டுகளாக மரைக்காயர்களுக்கும், பறங்கியர்களுக்கும் இடையே நடைபெற்ற போரின் தாக்கம் தலைமுறைகள் கடந்தும் எப்படி எதிரொலிக்கிறது என்பதுதான் நாவலின் கரு.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் வாழ்ந்த மூத்த குடிகளான மரைக்காயர்கள் மீது ஆதிக்கம் செலுத்த பறங்கியர்கள் முயன்றனர்.
இதனால், தங்களது தாய் நிலத்தை விட்டு வெளியேறி அந்நிய மண்ணில் அகதிகளாக அடைக்கலம் புகுந்த மரைக்காயர்களின் மறையாத வடுக்களை விரிவாகப் பேசுகிறது இந்நாவல்.
அந்த அகதிகளின் வழிதொட்டு வந்த பிற்கால தலைமுறையைச் சேர்ந்தவர்கள்தான் இந்த நூல் முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் மாந்தர்கள்.
கடந்த காலங்களின் நெடுந்துயர், தீயின் நாக்கு போல நீண்டு அவர்களது நிகழ்கால வாழ்வை எப்படி சுட்டெரிக்கிறது என்பது புனைவுகளோடு விளக்கப்பட்டுள்ளது. வட்டார வழக்கிலேயே நாவல் விரிவதால், கதைக் களத்துக்குள் எளிதில் சங்கமிக்க முடிகிறது. இருவேறு பிரிவுகளுக்கு இடையே நிகழ்ந்த போர் வரலாற்று உண்மை என்றாலும், அதனை அப்படியே கூறாமல், கருவை மட்டும் மையமாக வைத்து கதையின் பாத்திரங்களை கற்பனையில் படைத்திருப்பது சாதுர்யமான முயற்சி.
நன்றி: தினமணி, 5/11/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026318.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818