லால் பகதூர் சாஸ்திரி தலைமைப் பண்புகளின் பேராசான்
லால் பகதூர் சாஸ்திரி தலைமைப் பண்புகளின் பேராசான், ஆங்கிலம் அனிஸ் சாஸ்திரி, பவான் சவுத்திரி, தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன், விஸ்டம் வில்லேஜ் பப்ளிகேஷன்ஸ், பக். 372, விலை 245ரூ.
இந்தியாவின் பிரதமமந்திரியாகப் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரியின் தேவைகள் மிகவும் குறைவு. தன்னுடைய ருமானத்திற்குள் வாழ்க்கை நடத்துவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னிடம் எப்போதாவது உபரிநிதி ஆதாரங்கள் இருந்தால், அதை தேவைப்பட்டோருக்கு உதவும் வகையில் மீண்டும் சமுதாயத்திடமே சேர்ப்பதில் முனைப்பாக இருந்தார் என்பதை இந்த நூல் வாயிலாக அறிய முடிகிறது.
இத்தனை ஆளுமைத்திறன் மிக்க மாமனிதரிடமிருந்து இன்றைய தலைமுறையினரும், அரசியல்வாதிகளும் கற்றுக் கொள்ள ஏராளமானவை உண்டு. உடையில் எளிமை, நேரம் தவறாமை, குடும்பத்தில் கண்டிப்புடன் கூடிய மென்மையான அணுகுமுறை, நேர மேலாண்மை, எளிய வாழ்க்கையில் உயர்ந்த சிந்தனை, இல்லற நெறி, தவறு செய்பவர் தன் மகனாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுத்தது, பணியைச் செவ்வனே செய்தல், பிறர் கருத்துக்கு மதிப்பளிப்பது, மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் ஏற்பட்ட தொடர்வண்டி விபத்துக்குப் பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது.
பதவியிலிருந்து நீங்கியவுடன் அரசு வாகனத்தைப் பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியது என, அவரிடமிருந்து கற்க வேண்டிய நற்குணங்கள் ஏராளம். சாஸ்திரியிடமிருந்து சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்கின்ற தன்மை, அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு.
சர்தார் வல்லபாய் படேல் துணைப் பிரதமராக தனக்கு மிகுந்த இடையூறாக இருந்ததால், அவரது மறைவுக்குப் பின் மற்றொருவரை நியமிக்காமல் தவிர்த்தார் நேரு என்ற பதிவும், சாஸ்திரிஜி அமைச்சரவையில் தனக்கு இரண்டாவது இடமும் உள்துறை அமைச்சர் பொறுப்பும் வேண்டும் என்ற மொரார்ஜிதேசாயின் கண்டிப்பும், அன்றைய அரசியலின் அவல நிலையைத் தோலுரித்துக் காட்டுகின்றன.
நன்றி: தினமணி, 11/4/2016.