ரசூலின் மனைவியாகிய நான்
ரசூலின் மனைவியாகிய நான், புதியமாதவி, காவ்யா, பக்.139, விலை ரூ.140
ஏழு கதைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கதையான "ரசூலின் மனைவியாகிய நான் ஒரு குறுநாவல். மும்பை ரயில் குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த ரசூல் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறான். அவனுடைய மனைவி கவுரி, மருத்துவமனைக்கு வந்து அவனைக் கவனித்துக் கொள்கிறாள். அதே குண்டுவெடிப்பில் கவுரியின் வீட்டருகே உள்ள பணக்காரரான மங்கத்ராமின் மகன் கபில் இறந்துவிடுகிறான்.
ரசூல் இருக்கும் மருத்துவமனையில் அவனைப் போலவே குண்டுவெடிப்பில் காயமடைந்த ஹேமா இருக்கிறாள். ரசூலுடன் குண்டுவெடித்த ரயிலில் பயணம் செய்த அவனுடைய நண்பனின் மனைவி புஷ்பா தனது கணவன் என்ன ஆனான் எனத் தெரியாமல் தவிக்கிறாள்.
தீவிரவாதிகள் நிகழ்த்தும் குண்டு வெடிப்புகள் சாதாரண மக்களை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை மிகத் துல்லியமாக இந்த குறுநாவல் பதிவு செய்திருக்கிறது. இது போன்றே இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள அந்த விழிகள் அடையாளங்கள் ஆகிய சிறுகதைகளும் மதப் பிரச்னைகளால் மனிதம் துயர்ப்படுவதைப் பதிவு செய்திருக்கின்றன.
விநாயகர் சதுர்த்தியின்போது, கணபதியின் மீது பக்தி கொண்ட ஒரு பெண் கடலில் கணபதி கரைக்கப்படுவதைப் பார்த்து மனரீதியாகப் பாதிக்கப்படுவதைச் சித்திரிக்கிறது, கண்பதி பப்பா சிரிக்கிறார் சிறுகதை.இச்சமூகத்தில் பெண்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதைச் சொல்லும் அனஸ்தீசியா, திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவரும் மனரீதியான வேறுபாடுகளுக்கு உள்ளாகியிருந்தாலும், ஒன்றுபட்டு வாழ்வதைச் சித்திரிக்கும் வட்டமும் சதுரங்களும், திருமண பந்தத்தை ஆண்- பெண் உறவு, அன்பு, புரிதல் என்பவை தீர்மானிப்பதற்குப் பதிலாக சொந்தவீடு, க்ரீன் கார்டு போன்றவை தீர்மானிப்பதால் ஏற்படும் பிரச்னைகளைச் சொல்லும் பச்சைக்கிளி ஆகிய சிறுகதைகள் அனைத்தும் சமகாலப் பிரச்னைகளை சமூகப் பொறுப்புணர்வுடன் பதிவு செய்பவையாக இருக்கின்றன.
நன்றி: தினமணி, 5/8/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818