சின்னத்தாய் காவியம்
சின்னத்தாய் காவியம், கே.எஸ்.கே.நடேசன், ஓவியா பதிப்பகம், பக்.208, விலை ரூ.200.
அருகிலுள்ள குக்கிராமத்தில் தொடங்கும் இந்த நாவல், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளை விவரிக்கிறது.அதனால் ஏற்பட்ட வடுக்களோடு பஞ்சம் பிழைக்கச் சென்று,முன்னேற்றம் அடைந்த ஒரு குடும்பத்தின் வெற்றியையும் சித்திரிக்கிறது. உழைப்புதான் உயர்வை தரும் என்ற நம்பிக்கையை வாசிப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறது.
பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சில பிரிவு மக்களை அனுமதிக்க மறுப்பதை சின்னத்தாய் கதாபாத்திரம் எதிர்க்கிறது. சாதியக்கொடுமைகளுக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுகிறது நூல். நாவலின் நாயகனான கந்தவேல், வாத்தியார் சார், மாரி போன்றவர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருக்கின்றனர். எனினும் தெய்வ நம்பிக்கையின் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயமாகச் சுட்டிக்காட்டப்பட்டு துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டும், செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதாக இருந்த ஒரு பிரிவு மக்கள், இன்றைக்கு தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்ததற்கு,அந்த மக்களிடமிருந்த உழைப்பும் நாணயமும் முக்கிய காரணம் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்நாவல்.
சூரியன் போன்றது அல்ல வாழ்க்கை. அதில் நிலவைப் போல் தேய்பிறையும், வளர்பிறையும் மாறி மாறி வந்து செல்லும். தேய்பிறையில் துவண்டு விடுபவன், வளர்பிறையை நோக்கி பயணிக்க முடியாது. முயற்சிப்பவனே முழு நிலவைக் காண்கிறான் என நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த குடும்பத்தின் உயர்வு மட்டுமே சித்தரிக்கப்பட்டிருந்தாலும், உழைப்பு உயர்வைத் தரும் என்ற கருத்து சாதி பாகுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது சிறப்பு.
நன்றி: தினமணி, 22/2/2021.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031030_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818