திரு.வி.க.தமிழ் இதழியல் முன்னோடி
திரு.வி.க.தமிழ் இதழியல் முன்னோடி, அ.பிச்சை, காந்தி நினைவு அருங்காட்சியகம், பக்.104, விலை ரூ.100
தமிழறிஞராகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும் அறியப்பட்ட திரு.வி.க.,ஒரு பத்திரிகையாளரும் கூட. 1917 முதல் இரண்டரை ஆண்டுகள் தேசபக்தன் இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு 1920 முதல் 1941 வரை நவசக்தி இதழாசிரியராகப் பணியாற்றினார்.
23 ஆண்டுகளுக்கும் மேலாக இதழியல்துறையில் பணியாற்றிய திரு.வி.க. இதழியல்துறையில் செய்த மாற்றங்கள் எவை? இதழ்களின் மூலம் மக்களுக்கு அவர் பரப்பிய கருத்துகள் எவை? என்பதை விரிவாகவும், தெளிவாகவும் இந்நூல் எடுத்து உரைக்கிறது.
இவ்விரண்டு இதழ்களில் அரசியலைப் பற்றி மட்டும் அல்லாமல், ஆன்மசக்தி, அஞ்சாமை, உலக வாழ்வு, உடல், ஒழுக்கம், சமரச சன்மார்க்கம், பெண்கள் மக்கள் நிலை, மலைவாசம், மழை, வேள்வி முதலான தலைப்புகளில் கட்டுரை எழுதியிருக்கிறார்.
இந்நூலில் இடம் பெற்றுள்ள திரு.வி.க.குறித்து தமிழறிஞர் கருத்துகள்' என்ற கட்டுரையில் கல்கி, சோமலெ,மு.வ., வெ.சாமிநாதசர்மா, அ.ச.ஞானசம்பந்தன் ஆகியோர் திரு.வி.க.வின் இதழியல் மற்றும் அரசியல் பணிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
திரு.வி.க.வின் கருத்தியல் என்ற கட்டுரையில் தொழிலாளர் இயக்கம் பற்றி, பெண்களின் முன்னேற்றம் பற்றி, விடுதலைப் போராட்டம் பற்றி, சமரச சன்மார்க்கம் பற்றி திரு.வி.க.வின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டில் பிறந்தவர் மட்டுமின்றி குடி புகுந்து வாழ்பவர் அனைவரும் தமிழர் என்பதாக அவர் கருத்து இருந்திருக்கிறது. மதம், சாதியால் பிளவுபட்ட தமிழர்களை இணைத்து ஒற்றுமைப்படுத்த தமிழ் பயன்படும் என்ற கருத்தும் அவரிடமிருந்திருக்கிறது.
திரு.வி.க.வின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவும் சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 26/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818