திருமுருகாற்றுப்படை விளக்கம்
திருமுருகாற்றுப்படை விளக்கம், கி.வா.ஜகந்நாதன், பூங்குன்றன் பதிப்பகம், பக்.384, விலை ரூ.300.
திருமுருக கிருபானந்தவாரியார் நடத்திய ” திருப்புகழ் அமிர்தம்’ என்ற இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
முருகனை இன்ன வழியில் சென்று, இன்ன இடத்தில் கண்டால் முருகனுடைய தரிசனம் கிட்டும், அவன் திருவருளையும் பெறலாம் என்று சொல்லும் வகையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை.<br>
திருமுருகாற்றுப்படைக்கு பிற்காலத்தில் பத்து வெண்பாக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கான பொருளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகள் குறித்த, திருமுருகாற்றுப்படையின் ஒவ்வொரு வரியையும் எடுத்துக் கொண்டு, அதற்கான பொருளைக் கூறும் நூலாசிரியர், ஒவ்வொரு வரிக்கும் தனக்கேயுரியபாணியுடன் – பல சமயங்களில் கதை வடிவில் கூறும் சுவையான விளக்கங்கள் – நூலை கீழே வைக்க விடாமல் வாசிக்கத் தூண்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, “யாறும் குளனும் வேறுபல் வைப்பும்’ என்ற திருமுருகாற்றுப்படை வரிக்கு “இயற்கையான ஆற்றிலும், மக்கள் வெட்டிய குளத்திலும், இவை போன்ற வேறுபல இடங்களிலும்’ என்று பொருள் கூறும் நூலாசிரியர், “வேறு பல்வைப்பும்’ என்பதற்குத் தரும் விளக்கம் சுவையானது. “இப்பொழுதெல்லாம் நகரங்களில் சந்திகளில் நிற்பவர்கள் போலீஸ்காரர்கள்.வண்டிகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக அவர்கள் நிற்கிறார்கள். இந்த எல்லாச் சந்திகளிலும் முருகனுடைய அருளோட்டம் இருக்கிறது.அவன் அவ்விடத்தில் இருக்கிறான்.
அவனும் பெரிய காவற்காரன்தானே?’ என்று எல்லா இடங்களிலும் முருகன் இருக்கிறான் என்பதை அன்றாட வாழ்வின் நடைமுறை சார்ந்து விளக்குவதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எளிமையும் இனிமையும் நிறைந்த பக்திமணம் கமழும் சுவையான நூல்.
நன்றி: தினமணி, 6/9/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818