வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்
வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும், செ. திவான், சுஹைனா பதிப்பகம், பக்.216, விலை 200ரூ.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றி தம் ஆதிக்கத்தை
நிலைநிறுத்தியபோது அதை எதிர்த்து, தனி நபராகவோ, கூட்டாகவோ வன்முறை
வழியில் போராட்டங்கள் நடத்தி, தியாகங்கள் பல புரிந்து தம் இன்னுயிரைத்
துறந்தவர்கள் ஏராளம். அவர்களில் பலரையும், அவர்கள் நிகழ்த்திய போராட்டங்களையும் இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது.
மக்களின் மன எழுச்சியினாலும், வரலாற்றின் மறுமலர்ச்சியாலும் புரட்சி இயக்கங்கள் பல தோன்றி வளரத் தொடங்கின. குறிப்பாக சாபேகர் சகோதரர்களிடம் காணப்பட்ட ஆர்வமும் எழுச்சியும் மராட்டிய இளைஞர்களிடத்தில் உத்வேகத்தை ஏற்படுத்தியது.
அதேபோல தமிழ்நாட்டிலும் பல சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளது நூல்.
கல்கத்தாவில் 1902-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் ரகசிய சங்கத்தில் அரவிந்தரால் முன்மொழியப்பட்ட உறுதிமொழியும் எழுச்சியுரையும் இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டிய பதிவு.
தமிழகத்தின் தென்கோடியில் மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷ்ஷை சுட்டுவிட்டு, தன்னுயிரையும் மாய்த்துக் கொண்ட வாஞ்சிநாதன் போன்ற தியாகிகளின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது பற்றி இந்நூல் விளக்குகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தைப் பற்றிய ஒரு வரலாற்று ஆவணம்.
நன்றி: தினமணி, 10/4/2017.