வெயிலில் நனைந்த மழை

வெயிலில் நனைந்த மழை, ச. மணி, இடையன் இடைச்சி நூலகம், கோவை, பக். 96, விலை 100ரூ.

கவிதைகளை வெயிலில் நனையவிடலாம், மழையில் காயப் போடலாம், அது இலக்கணப் பிழையோ, சொற்பிழையோ ஆகாது. கவிதையின் கொண்டு கூட்டுப் பொருள்கோளில் பொருட்பிழை நிகழாது கவிஞன் நிகழ்த்திக் காட்டும் உத்தி அது. கவிஞர் ச. மணி வெயிலில் நனைந்த பிறகும் மழை மழையாகவே இருக்கிறது என்பதை நம்முன் காட்சிப்படுத்துவது அனுபவ வெளிப்பாடு. நூற்றாண்டினாலும் பக்தர்களின் பாதங்களை அலம்பி விடும் தெப்பக்குளத்து மழை கவிஞரின் படிமக் காட்சிக்கு சாட்சி. காதலிக்கத் தெரியாதவர்களின் கனவுகளில் ஒருபோதும் வருவதில்லை மழை என்று இதயங்களை ஈரப்படுத்துகிறார். நனைய மறுக்கும் மரங்களை அதட்டிக் கொண்டிருக்கிறது காற்று என்ற காட்சி படிப்போரை குடையை எடுத்துக் கொள்ளச் சொல்லும் எச்சரிக்கை மழை. முதல் நிர்வாண ஓவியனின் கண்டுபிடிப்பு புதுமழை. வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை ஒன்றுவிடாமல், மழைத் துளிகளாக்கி அதே நேரம் சிதற விடாமல் படிப்போர் மேலே பொழிய வைக்கும் இந்த மழையை அனுபவிக்க குடை தேவையில்லை. வெயில் தேவை. நன்றி: குமுதம், 13/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *