அபாய வனம்
அபாய வனம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், பக். 180, விலை 320ரூ.
அபாயவனம் நாவல், சித்தர்களின் சித்து விளையாட்டுகள் பற்றியது. சித்தர்களின் தூர தரிசன சக்தி, ஜீவசமாதி என, துவக்கத்திலேயே, வாசகனை திகிலோடு, கதைக்குள் அழைத்து செல்கிறார். பரணி, குரு என்ற இரு இளைஞர்கள் வாழ்வில் புகும், சித்தர் சிவப்பிரகாசம் என்னென்ன ஆச்சரிய நிகழ்வுகளை ஏற்படுத்துகிறார் என்பதையும், அவர்கள் தேடிச்செல்லும், சித்தரின் ஜீவசமாதியும், ஏடுகளும் கிடைத்ததா என்பதையும், இறுதிவரை பரபரப்பு குன்றாமல் எழுதி உள்ளார். ஒவ்வொரு அத்தியாய முன்னுரையாக, கொல்லிமலை, சதுரகிரி உள்ளிட்ட ஆன்மிக மலைகளின் சிறப்புகளையும், வன வியாசம் என்ற பெயரில், எடுத்துரைத்துள்ளர். நீ எதிர்பார்க்கிற விதத்துல கடவுள் காட்சி தரலைன்னா, அவர் இல்லைன்னு பொருள் கிடையாது என, கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, நாவல் முழுதும் ஆன்மிகம் ஆக்கிரமித்துள்ளது. இந்திரா சவுந்தர்ராஜன் என்றதும் வாசகர்களுக்கு ஏற்படும் எதிர்பார்ப்பை இந்த நாவலிலும் நிறைவேற்றியிருக்கிறார். நன்றி: தினமலர்,18/8/2014.
—-
வாங்க யோகா செய்யலாம், ஜி.டி. அன்பரசன், சித்தர் கலைப்பதிப்பகம், சென்னை, விலை 40ரூ.
வீட்டில் இருந்தவாறே எளிய முறையில் யோகாசனம் கற்றுக் கொள்வதற்கு உதவும் புத்தகம். 25க்கும் மேற்பட்ட யோகாசனங்கள் பற்றிய குறிப்புகளும், தியான முறைகளும் புகைப்படங்களுடன் விளக்கமாக தரப்பட்டுள்ளன. இன்றைய பரபரப்பான நோயற்ற வாழ்க்கைக்கு தியானமும், யோகாசனமும் மிக அவசியம் என்பதை புத்தக ஆசிரியர் நன்கு விளக்கி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 6/8/2014.