அமர்த்தியா சென் – சமூக நீதிப் போராளி
அமர்த்தியா சென் சமூக நீதிப் போராளி – ரிச்சா சக்சேனா; தமிழில்: சி.எஸ்.தேவநாதன்; பக்.176; ரூ.100; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-642002
பொருளாதாரத்துறையில் நோபல் பரிசு பெற்றவர் அமர்த்தியா சென். இந்நூல் அவருடைய வாழ்க்கையையும், சிந்தனைகளையும் விரிவாகச் சொல்கிறது. பொருளாதாரவியல் வெறும் பொருளாதாரத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல, அது தத்துவம், மனிதநேயம் ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டது என்பது அமர்த்தியா சென்னின் கருத்து. பொருளாதார நிபுணர் என்ற அளவில் நின்றுவிடாமல், ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் போன்றவற்றிலும் அவர் அக்கறையுள்ளவராக இருந்தார் என்பதை நூல் விவரிக்கிறது. “சோஷியல் சாய்ஸ்’ என்ற பொருளாதாரக் கோட்பாட்டை அமர்த்தியா சென் வலியுறுத்துகிறார். ஏழ்மைநிலை, பொருளாதார ஏற்றத் தாழ்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அடிப்படையில் தனது பொருளாதார ஆய்வுகளைச் செய்து உலகுக்கு அறிவித்திருக்கிறார். மேல்தட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்க மட்டுமே பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படக் கூடாது. ஒரு மனிதன் முன்னேற முடியாமல் தவிக்கிறான் என்றால், அதற்கு அவனுடைய குறைந்த வருமானம் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. கல்வி அறிவின்மை, உடலைப் பராமரிக்க முடியாமை, சத்துள்ள உணவுகள் கிடைக்காமை போன்றவை அவனுடைய வாழ்வில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்த சமூகத்தில் வாழும் மக்களின் தேவைகளையும், நன்மைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதாக இன்றையப் பொருளாதாரக் கொள்கைகள் இருக்க வேண்டும் என்பன போன்ற அமர்த்தியா சென்னின் கருத்துகளை இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நமது காலத்தின் வித்தியாசமான பொருளாதார நிபுணரை அறிமுகப்படுத்தும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 16.7.2012