ஆலமரம்
ஆலமரம், விஜயலஷ்மி சுந்தராஜன், மணிமேகலைப் பிரசுரம், பக். 958, விலை 490ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-230-5.html இளைப்பார ஓர் ஆலமரம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்காக ஏங்கிக் கிடக்கும் கணிசமான வாசகர்களை இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் திருப்திப்படுத்தும். ஆயிரம் பக்கங்களில் ஒரு நாவலைப் படிக்க யாருக்கு இப்போதெல்லாம் அவகாசம் இருக்கிறது ? என்ற கேள்வியை மட்டும் ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சம் துணிவோடு படிக்கத் தொடங்கிவிட்டால் போதும். அன்று கடல் போல் சொத்துடன் ஒற்றையாக நின்ற அம்புஜம்! இன்று அவளுடைய வாரிசாக அறுவர் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்று கடைசி வரியைப் படிக்கிற வரை ஒரே சீரான வேகமும், சுவாரஸ்யமும் கைகோர்த்துச் செல்வதைப் படிக்கிறவர்கள் நிச்சயம் உணர்வார்கள். ஒரு பிராமண வைணவக் குடும்பத்தை மையப்படுத்திய கதை – அதுவும் வளமான தஞ்சாவூர் மாவட்டத்துப் பின்னணி. சுதந்திரப் போராட்டம் அரும்பிய காலம். இரண்டாம் உலகப்போர் என்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நிலவிய சமுதாய, பொருளாதார வாழ்க்கை முறையை அணுஅணுவாக என்கிற மாதிரி படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர் விஜயலக்ஷ்மி சுந்தரராஜன். எட்டு வயதில் திருமணமாகும் அம்புஜம், கதை முழுவதும் வளைய வருகிற அற்புதமான பாத்திரப் படைப்பு. திருமணமாகிப் புக்கம் வருகிறபோது இவளுடைய தம்பி மனைவி அமுதா கொண்டு வருகிற ஆலமரக் கன்று வளர்ந்து செழித்துப் படர்ந்து… நிஜமாகவே ஆலமரமான குடும்பம் அது. சாதாரணமாக இவ்வளவு கனமான நூலை வெளியிட எந்தப் பதிப்பாளரும் தயங்கவே செய்வர். ஆனால் விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் எழுதிய இந்த நாஸ்டால்ஜிக் அனுபவ நூலை மிகவும் துணிவோடு வெளியிட்டிருப்பவர்கள் மணிமேகலைப் பிரசுரத்தார். துணிவே துணை என்பது தமிழ்வாணனின் தாரக மந்திரம் இல்லையா? -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 11/1/2015.