கடந்து போகிறவர்களின் திசைகள்
கடந்து போகிறவர்களின் திசைகள், ஆசு, இருவாட்சி, பக். 160, விலை 100ரூ.
வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. வாழ்க்கையை உணர்ந்து, சமூக அக்கறையுடன் எழுதும் கதைகளில்தான் உயிர்ப்பு இருக்கும். இப்படிப்பட்ட கதைகளை எழுதுவதற்கு வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள் தேவை. நூலாசிரியருக்கு அத்தகைய அனுபவங்கள் இருப்பதை இந்நூலில் உள்ள சிறுகதைகளைப் படிக்கும் வாசகர்கள் நிச்சயம் உணர்வார்கள். பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இந்நூலில் உள்ள சிறுகதைகளில் மிகவும் இயல்பாக, உயிர்ப்புடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நாம் அன்றாடம் சந்திக்கும் பல மனிதர்களை இந்நூலில் நாம் சந்திக்க முடிகிறது. அவர்களுடன் பேச முடிகிறது. அவர்களுடைய இன்ப துன்பங்களுடன் நாமும் இணைந்து செல்ல முடிகிறது. வழக்கமான சிறுகதைகளுக்கு மாறாக, இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் எதுவும் முற்றுப் பெறுவதில்லை. அனுபவங்கள், சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. அவை எந்தப் புள்ளியிலும் நின்றுவிடுவதில்லை. எனவே கதை தொடங்கிய இடத்திலேய முடிந்தும்விடுகிறது. இக்கதைகளின் மையம் என்பதாக எதுவுமில்லை. புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரும் கதைகளாக இவை உள்ளன. வித்தியாசமான முயற்சி. நன்றி: தினமணி, 07/3/2016.