குறுந்தொகை உரை நெறிகள்
குறுந்தொகை உரை நெறிகள், ஆ.மணி, தமிழன்னை ஆய்வகம், 56, அன்பு இல்லம், 4ஆவது குறுக்குத் தெரு, அமைதி நகர், அய்யங்குட்டிப் பாளையம், புதுச்சேரி 605009, பக். 304, விலை 113ரூ.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகைக்கு இதுவரை 19க்கும் மேற்பட்ட உரைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் மிகவும் இன்றியமையாத உரைகளாகக் கருதப்படும் தி.சௌ. அரங்கனார், உ.வே. சாமிநாதையர், ரா.இராகவையங்கார் ஆகியோரின் உரைகளைத் தொகுத்தும் வகுத்தும், விரித்தும் விளக்கியுள்ளார் நூலாசிரியர். கிடைக்கப்பெறாத உரைகளான பேராசிரியர் உரை, நச்சினார்க்கினியர் உரை பற்றிய குறிப்புகளும் உள்ளன. குறுந்தொகையின் முதல் உரையாசிரியரும் பதிப்பாசிரியருமான, தி.சௌ.அரங்கனாரே பின் வந்த உரையாசிரியர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். அந்த வகையில் திணை வகுக்கப்படாமல் இருந்த குறுந்தொகைகு முதன் முதலில் திணை வகுத்தவர் இவர்தான். குறுந்தொகை உரைகளின் தோற்றம் வளர்ச்சியும் என்பதை முதலில் விளக்கி, மேற்குறிப்பிட்ட உரையாசிரியர் மூவரின் வாழ்க்கைக் குறிப்புகளோடு அவர்களின் உரையில் உள்ள வேறுபாடுகள் பலவற்றையும் விளக்கி, இறுதியில் உரைகளை ஒப்பீடும் மதிப்பிடும் செய்திருக்கிறார். நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் 18க்கும் மேற்பட்ட குறுந்தொகைப் படைப்புகள் இவர் குறுந்தொகையில் ஆழங்காற்பட்டவர் என்பதை மெய்ப்பிக்கின்றன. நன்றி: தினமணி, 27/1/2014.
—-
பாரம்பரிய அறிவியல், புதிய வாழ்வியல் பதிப்பகம், 26, மூன்றாவது மெயின் ரோடு, கோட்டூர் கார்டன், சென்னை 85, விலை 80ரூ.
ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழி சொல்லும் கட்டுரைகள் கொண்ட சிறந்த நூல். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டிய அவசியம். நம் சமையலில் பயன்படுத்த வேண்டிய மூலிகைப் பொருள்கள், முடி கொட்டுவதை தடுக்கும் வழி, விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் இப்படி (நம் முன்னோர்கள் கடைப்பிடித்து) பாரம்பரிய ஆரோக்கிய ரகசியங்களை எடுத்துக் கூறுகிறார் ஆசிரியர் ஜெ. ஜெயகிருஷ்ணன். நன்றி: தினத்தந்தி, 12/2/2014.