கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள்

இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள், மு. அப்பாஸ் மந்திரி, நர்மதா வெளியீடு, சென்னை – 17, பக்கம் 192, விலை 90 ரூ.

அன்பையும் அறத்தையும் அடிநாதமாகக் கொண்டது கன்ஃபூசியனிஸம். இதை சீனாவில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அறிமுகப்படுத்தியவர் கன்ஃபூசியஸ். உண்மை, இரக்கம், ஒருமுகப்படுத்துவது, சகோதரத்துவம், தாய்மையைப் போற்றுதல், கல்வி, ஒழுக்கம் போன்ற பலவற்றைக் குறித்த கன்ஃபூசியஸின் தத்துவங்களை விளக்கும் கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. சமூகத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் சென்றடையும் வகையில், கசப்பு மருந்துக்கு இனிப்புப் பூச்சுடன் தத்துவங்களை அளிக்கும் இந்த முயற்சி பெரியவர்களை மட்டுமல்ல, சிறியவர்களையும் கவரும்.  

கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள்,ஆரூர்தாஸ், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 1, பக்கம் 264, விலை 125 ரூ.

ஐந்நூறு நேரடி தமிழ்ப் படங்களுக்கும், ஐந்நூறு மொழி மாற்றுப் படங்களுக்குமாக சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய சாதனையாளர் திரைப்பட, கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ். அக்காலத்தில் நடிப்புத்துறையில் போட்டியாளர்களாகக் கருதப்பட்ட எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் இருவருடைய படங்களுக்கும் ஒரே சமயத்தில் வசனம் எழுதிய பெருமைக்குரியவர். தனது திரையுலக அனுபவங்களை ஆரூர்தாஸ் இந்த நூலில் விவரித்திருந்தாலும் ஆங்காங்கே சென்னை நகரின் வரலாற்றையும் தொட்டுச் செல்வது ரசிக்கும்படி இருக்கிறது. தாமஸ் ஆல்வா எடிசன் தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை ‘சினிமா’ என்று அழைத்ததையும், பின்னர் தமிழ் நாட்டில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு, முதல் சினிமா ஸ்டுடியோ என்று ஏராளமான சுவையான பல தகவல்கள் நூல் முழுக்க விரவிக் கிடக்கின்றன. வெற்றிப்படத் தயாரிப்பாளர்கள் என்று அறியப்பட்ட ஏ.வி. மெய்யப்ப செட்டியார், எஸ். எஸ். வாசன், நாகிரெட்டி, மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்றோர் பொறாமைப்படும் அளவுக்கு சாதனை புரிந்த, வெற்றிப் படங்களைத் தயாரித்த சம்பந்திகளாக இருந்த மதுரையைச் சேர்ந்த இரு தயாரிப்பாளர்களைப் பற்றிய கட்டுரை மிகுந்த வியப்பைத் தருகிறது. அருணாசலம் ஸ்டுடியோ, பிரசாத் ஸ்டுடியோ போன்றவை உருவான வரலாற்றை ஆரூர்தாஸ் தன் சொந்த அனுபவங்களுடன் இணைத்து எழுதியிருப்பது ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. அக்கால ஸ்டுடியோக்களைப் பற்றிய குறிப்புகள் இன்றைய தலைமுறையினரை வியப்பில் ஆழ்த்தும். திரைத்துறையில் இருந்தாலும் ஒருபக்கமாக இருந்ததே தனது வெற்றிக்கு முக்கிய காரணம் என ஆரூர்தாஸ் குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளத்தக்கது. திரைப்பட ரசிகர்கள், திரையுலகப் பிரமுகர்கள் என அனைவரும் அவசியம் படித்துப் பயன் பெறவேண்டிய அற்புத நூல். நன்றி: தினமணி 17-09-12  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *