தாதுமணல் கொள்ளை
தாதுமணல் கொள்ளை, முகிலன், ஐந்திணை வெளியீட்டகம், விழுப்புரம், விலை 160ரூ.
இயற்கையின் கொடையை சுயநலச்சக்திகள் சூறையாடவதை அம்பலப்படுத்தும் ஆவணம் இது. தமிழகத்தின் தென்பகுதியான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலோரப் பகுதியில் இருக்கும் தாதுவளம், கடந்த 20 ஆண்டுகளாக கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. பேருக்கு அரசின் அனுமதியை வாங்கிகொண்டு பெருமளவு அள்ளி கணக்கில்லாத கோடிகளைக் கொண்டுபோய்விடுகிறார்கள். இவை அரசின் சொத்து, அதாவது நாட்டின் சொத்து. இன்னும் சொல்லப்போனால் மக்கள் சொத்து. ஆனால் இதனைத் தட்டிக் கேட்கும் மக்களை தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டி காக்கிச் சட்டைகள் துன்புறுத்துவதும் அல்லது எப்படியாவது வாயை அடைக்கச் செய்வதும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சட்டத்தை மீறி, விதிமுறைகளை மீறி, தொழிலாளர்களை கொத்தடிமைகளகாக மாற்றி, அந்த வட்டாரத்து மக்களின் வாழ்க்கை நலத்தைக் கெடுத்து விவசாய நிலங்களை வறட்சியாக்கி, கடலையே பின்னுக்குத் தள்ளி வற்ற வைத்து, சுற்றுச்சூழலைக் கெடுத்து நடந்துவரும் கொள்ளையை அம்பலப்படுத்தி, பல்வேறு ஆதாரங்களுடன், கட்டுரைகள் வந்துள்ளன. ஆனால் மொத்தமாக வந்திருக்கும் தொகுப்பு இது. இதனை எழுதியவர், இதைப்பற்றி படித்து ஆர்வத்தால் எழுதுபவர் அல்ல. இந்த மக்களுக்காக போராடியபடி எழுதுபவர். ஈரோடு மாவட்டத்தில் பிறந்த முகிலன், ஈழப்போராட்ட ஆர்வலராக வளர்ந்த நொய்யல் ஆறு பாதுகாப்பு, சிப்காட் கழிவுக்கு எதிரான போராட்டம், சாயப்பட்டறைகளில் கழிவுகள் கலப்பதற்கு எதிர்ப்பு என தன்னுடைய எல்லையை அதிகப்படுத்தி, அணுஉலைகளுக்கு எதிராக களகத்தில் நிற்பவர், கேரளா, கர்நாடகம், ஆந்திரம் எனத் தமிழகத்தைச் சுற்றியுள்ள அரசுகள் தனது இயற்கை வளங்களை எந்தவிதத்திலும் வீணாக்கிவிடாமல் தடுத்துப் பாதுகாத்து வருகின்றன. அதிலும் 45 ஆற்றுப்படுகைகளைக் கொண்ட கேரளத்தின் ஆறுகளில் இருந்து ஒரு பிடி மணலைக்கூட எடுக்க அனுமதிக்காமல் கேரள அரசு பாதுகாத்து வருகிறது. ஆனால் தமிழக அரசோ ஆற்று மணல், தாது மணல், கிரானைட் மற்றும் அனைத்து வளங்களையும் சில தனிநபர்களின் சுரண்டல் வேட்டைக்காகத் தமிழகத்தையே சூறையாட அனுமதித்துவிட்டு, கைகட்டி வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறது என்ற ஆதங்கத்தின் காரணமாக மண்ணாசையுடன் எழுதி இருக்கிறார் முகில். ஒரு செ.மீ. மணல் உருவாக 100 ஆண்டுகள் தேவை என்கிறது அறிவியல். ஆனால் கோடிகளை வைத்துக் கொள்ளை லாபம் அடைந்தவர்களால் ஒரு செ.மீட்டர் மணலைக்கூட உருவாக்க முடியாது.