நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நினைவுகள்
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நினைவுகள், கல்யாணி இராமசாமி, வசந்தா பதிப்பகம், பக். 160, விலை 200ரூ.
திரைப்பட உலகில் இன்று நிலவும் பகுத்தறிவு கருத்துகளுக்கு, வித்திட்டவர், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. அண்ணாதுரையின் வலதுகரமாகச் செயல்பட்டவர், கே.ஆர். இராமசாமி. பராசக்தி மற்றும் மனோகரா திரைப்படங்களில் தனக்கு வந்த வாய்ப்பை, அண்ணாதுரை சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக, சிவாஜி கணேசனுக்கு விட்டுக்கொடுத்தவர், அண்ணாதுரையின் நிழலாக வாழ்ந்தவர். காலமெல்லாம் தாம் சம்பாதித்த வருவாயை, கழகம் வளரவே செலவழித்தார். தனக்கொரு குடும்பம் இருக்கிறது என்பதையே மறந்து, தூய கழகத் தொண்டனாக வாழ்ந்தார். நண்பர் கே.ஆர். இராமசாமி, கலை உலகில் ஒரு கருவூலம். காசுக்காக மட்டுமே நடிக்காத ஒரு கடமை வீரர். உலகம் பிளந்து வாழ நேர்ந்தாலும், நெஞ்சம் குலையாத ஒரு கொள்கைத் தங்கம் என, அண்ணாதுரை பாராட்டி இருக்கிறார். கடந்த 1914, ஏப்ரல் 14ல் பிறந்த கே.ஆர். இராமசாமி, 1971 ஆகஸ்ட் 5ம் தேதி மறைந்தார். தன் கணவரைப் பற்றி, திருமதி கல்யாணி இராமசாமி இந்த நூலில் பல அருமையான தகவல்களைத் தருகிறார். -எஸ். குரு. நன்றி: தினமலர்,18/10/15.