நான் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு
நான் பார்த்ததெல்லாம் அழகின் சிரிப்பு, டாக்டர் அ. கலாநிதி, வெற்றி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அ.கலாநிதி, தமது நியூசிலாந்து சுற்றுப்பயண அனுபவங்கள் பற்றி எழுதிய புத்தகம் இது. நியூசிலாந்து நாட்டில் பார்க்க வேண்டிய இடங்களையும், அந்த நாட்டின் சிறப்புகளையும் நூலாசிரியர் சிறப்பாக வர்ணித்து இருப்பதால், நாமும் அங்கு இருப்பது போன்ற பிரமை உண்டாகிறது. புத்தகம் முழுவதும் வண்ணத்தில் அச்சிடப்பட்டு இருப்பதால், புத்தகத்தின் சிறப்பு மேலும் உயருகிறது. நியூசிலாந்துக்கு செல்ல இருப்பவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டி. செல்ல இயலாதவர்களுக்க அந்த நாட்டை அறிந்துகொள்ள அரியதொரு புத்தகம். நன்றி: தினத்தந்தி, 11/2/2015.
—-
சீறாப்புராணம், உரை சதாவதானி செய்குத்தம்பி பாவலர், யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, முதல் பாகம் 500ரூ, இரண்டாம் பாகம் 600ரூ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றை விளக்கும் காப்பியம், சீறாப்புராணம். விலாதத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டம், ஹிஜுரத்துக் காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களைக் கொண்டது. உமறுப்புலவர் எழுதிய இந்த நூலுக்கு சதாவதானி செய்குத் தம்பி பாவலர் உரை எழுதியுள்ளார். சீறாப்புராணம், மூலமும் உரையுடன் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. மறுவிலாது எழுந்த முழுமதி போல முகம்மது நபி பிறந்தனரே, மானிலம் தனக்கோர் மணிவிளக்கு எனலாய் முகம்மது நபி பிறந்தனரே என்று தமிழ் இலக்கிய சூழலுக்கு ஏற்ப நபிகளார் வரலாற்றை உமறுப்புலவர் எடுத்துரைக்கிறார். இஸ்லாமியத் தமிழ்க் காப்பியத்தின் முத்தாகத் திகழும் சீறாப்புராணம் மூலமும், உரையுடன் வெளிவந்திருப்பது, இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இலக்கிய அன்பர்களுக்கும் விருந்தாகும். நன்றி: தினத்தந்தி, 11/2/2015.