நீங்களும் இராமனாகலாம்
நீங்களும் இராமனாகலாம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 136, விலை 65ரூ.
மகாத்மா காந்திஜி ஒரு முறை, நாம் ஒவ்வொருவரும் முயன்றால் ராம பிரானாக ஆகலாம் என்று கூறியுள்ளார். அதையே தலைப்பாக்கி இந்த நூல் ராமபிரானின் உயரிய குணநலன்களை விவரித்து, வேத நெறிகளின்படி வாழும் ஒவ்வொரு மனிதனும், உயர் நலங்கள் அனைத்தையும் பெறுவான் என எடுத்துரைக்கிறது. ராமனைப் பற்றியும், ராமாயணச் சிறப்பு பற்றியும் கூறுவதோடு, கண்ணனின் தூது, சமாதானத்தின் வெளிப்பாடு என்று ஒரு நெடுங் கட்டுரையும், தூய்மையான அன்பு துயரைத் துடைக்கும் என்றொரு நெடுங்கட்டுரையும் எடுத்துரைக்கின்றன. வாழ்க்கை நெறிகளை அருமையாக விளக்குகின்றன ஒவ்வொரு கட்டுரையும். -கவுதம நீலாம்பரன்.
—-
சுந்தரமூர்த்தி சுவாமிகள், தவத்திரு.அ.வே. சாந்திகுமார சுவாமிகள், சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 144, விலை 50ரூ.
சைவ சமய குரவர்கள் நால்வருள் சுந்தர மூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கையும் பக்தி இலக்கிய பணியும் அன்பர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. சிவனடியார்களின் திருத்தொண்டுகளை உலகறியச் செய்த பெருமைக்குரியவர், சுந்தரர், பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான், தடுத்தாட்கொண்ட புராணம், விறன் மீண்ட நாயனார் புராணம், கழற்றிறறிவர் புராணம், வெள்ளானைச் சருக்கம் ஆகிய இடங்களில் சுந்தரரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய தகவல்களை, 838 பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். சுந்தரர் குறித்த இந்த நூலை மிக நன்றாக தயாரித்து அளித்துள்ளார், நூலாசிரியர். பல தகவல்கள், ஆதாரப் பூர்வத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிடுதல் அவசியம் பாராட்டுக்குரிய முயற்சி. – ஜனகன். நன்றி: தினமலர், 14/7/13.