பழஞ்சீனக் கவிதைகள்
பழஞ்சீனக் கவிதைகள், வான் முகில், மீனா கோபால் பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, ஆதம்பாக்கம், சென்னை 88, பக். 216, விலை 180ரூ.
ஆங்கில மூலத்திலிருந்த தமிழாக்கம் செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட, 63 கவிஞர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தருக்கடைந்தால் அது, தன் வீழ்ச்சிக்குத் தானே வித்திடலாகும். உன் பணி முடிந்ததும் பின்னடைந்திரு, விண்ணக வழி அத்தகையதே (பக். 75) என, மிகை வெற்றியின் அபாயம் குறித்தும். ஒளிமிகு சன்னலின் கீழ் என்னுடன் இருப்போர் யார்? இருவர் என் நிழலும் நானும், ஆனால் விளக்கு எரிந்து முடிகையில், தூங்கு நேரமாகும்போது, நிழலும் என்னைத் துறக்கும், ஆ அவலம் நான் தனியன். (பக். 167) என, தனிமை பற்றியும். பயனற்ற பொருள்கள், உங்கள் மனதில் சுமையாய் இருக்காவிடில் எந்த பருவமும் உங்களுக்கு நல்ல பருவமே (பக். 189) இப்படி சிந்தனையை தூண்டும் ஏராளமான கவிதைகள் உள்ளன. சீன கவிதை இலக்கிய வரலாறும், கவிதைகளுக்குரிய கவிஞர்களின் வரலாறும் படங்களும் நூலுக்கு அணிகலன்களாய் அமைந்துள்ளன. படித்து இன்புறலாம். -பின்னலூரான். நன்றி: தினமலர், 22/9/2013.
—-
பரத கண்ட புராதனம், பொ. வேல்சாமி, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், பக். 136, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-814-7.html
டாக்டர் கால்டுவெல் பாதிரியார், தன் மதத்தை பரப்ப இங்கு வந்த போது தமிழ் கற்று, சிறப்படைந்து நூல்கள் எழுதியவர். கால்டு வெல் ஒப்பிலக்கணம் உட்பட அவரது நூல்கள், பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது வரலாறு. அந்த வகையில் இந்த நூலும், காலங்களை தாண்டி இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் வாழ்வதை உணராமல், பழிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பண்டித நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியாவில் உலக நாடுகள் பலவற்றில் வாழ்ந்த மனிதர்கள், ஆடையின்றி மிருகங்களைபோல வாழ்ந்த நாட்களில் மஸ்லின் துணி அணிந்து, மேம்பாடு உடைய நாகரிகத்துடன் வாழ்ந்தவர்கள் இந்தியர்கள் என்றிருக்கிறார், ஆங்கில அறிஞர்கள் அரைகுறை கருத்துக்களையும், பிரிட்டிஷார் ஆதிக்க உணர்வையும் ஏற்க முடியாமல் அவ்வாறு அவர் விமர்சித்தார். இதிகாசங்களையும், புராணங்களையும் தற்போது மேனாட்டு அறிஞர்கள் ஆய்வு செய்து, அது இக்கால நிர்வாகத் திறன் வாழ்வுடன் இணைந்து இருப்பதாக பேசும்போது கால்டுவெல், தமிழில் எழுதிய இந்த நூல் பழம் கருத்துடன் வெளிவந்திருப்பது வியப்பாகும் -பாண்டியன். நன்றி: தினமலர், 22/9/2013.