பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள், உரையாசிரியர் கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 750ரூ.
39 வயது வரையே வாழ்ந்த முண்டாசுக் கவிஞர் பாரதியார் இயற்றிய கவிதைகள் ஏராளம். தேசப்பற்று, ஆன்மிகம், சமூக மாற்றம், சாதிமறுப்பு, பெண்ணியம் என்று அவரது கவிதை வானத்தின் அளவு, விரிந்து பரந்தது. அவரது அத்தனை கவிதைகளையும் அழகாகத் தொகுத்து, அவற்றுக்கு முதல் முறையாக உரையும் வழங்கி இருக்கிறார், ஆசிரியர். வசன கவிதைகள் தவிர்த்து மற்ற எல்லா கவிதைகளும் உரையும், மேலும் அவற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் குறிப்புகளும் தந்து இருக்கிறார். இதனால் கவிதைகள் மூலம் பாரதியார் வெளிப்படுத்திய கருத்துக்களை யார் ஒருவர் துணையும் இன்றி அப்படியே உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்பும் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 19/11/2014.
—-
உயிர்த்துளி உறவுகள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ.
அறம், அறிவியல் சார்ந்த கண்ணோட்டங்களை வழங்கும் வகையில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூலாகும். இயற்கையின் சீற்றங்களை புகைப்படத்துடன் வெளியான கட்டுரைகள் அனைவரையும் கவரக்கூடியவை. நன்றி: தினத்தந்தி, 19/11/2014.