மஹாபாரதம்
மஹாபாரதம், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 320ரூ.
எல்லோருக்குமான பாரதக் கதை இந்தியாவின் பிரதான இதிகாசங்களில் ஒன்று மகா பாரதம். இதன் பிரதான கதையும் கிளைக்கதைகளும் படிப்போரைப் பரவசப்படுத்துபவை. மகாபாரதக் கதையைப் படிக்க எல்லோரும் விரும்புவது இயற்கை. ஆனால் மகாபாரத வாசிப்பு அசுர உழைப்பைக் கோருகிறது. முழுக் கதையையும் படிக்க வேண்டும். ஆனால் எளிதாகவும் விரைவாகவும் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வம் அனைவருள்ளும் எழும். இந்த ஆர்வத்தைப் பூர்த்திசெய்யும் நோக்கத்தில் ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் மஹாபாரதம் என்னும் நூலை வழங்கியுள்ளது. விகரு. இராமநாதன் பதிப்பித்துள்ள இந்நூலின் உரைநடையைக் கவிஞர் பத்மதேவன் எழுதியுள்ளார். மகா பாரதத்தின் 18 பர்வதங்களையும் இந்த நூல் தன்னுள் அடக்கியுள்ளது. ஆனால் வழக்கமான பாரதக் கதைகள் போல் இந்நூல் அதிக எண்ணிக்கையிலான பக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. 648 பக்கங்களுக்குள் முடிந்துவிடுகிறது. 18 பர்வங்களின் பெயர்க்காரணங்களுக்கான விளக்கமும், மகாபாரதக் கதைமாந்தர்கள் பற்றிய சுருக்கமான அறிமுகமும் நூலின் முதலிலேயே தரப்பட்டுள்ளன. மகாபாரதத்தைப் படிக்க விரும்புவர்களுக்கான நுழைவு வாயிலாக இந்நூல் விளங்குகிறது. அனைவரும விரும்பிப் படிக்கும் வகையில் எளிய நடையில் உள்ள இந்நூல் தொடக்க நிலை வாசகர்களின் விருப்பத்தை எளிதில் பூர்த்திசெய்கிறது. நன்றி: தி இந்து, 2/8/2014.
—-
நித்யாவின் அர்த்தமுள்ள மவுனம், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 65ரூ.
சமூகத்தில் தனிப்பட்ட ஒரு மனிதனின் திருப்தியற்ற மனப்போக்கும் அதனால் ஏற்படும் காழ்ப்புணர்ச்சியும் சுற்றியுள்ள எத்தனை மனிதர்களையும், குடும்பங்களையும் பாதிக்கிறது என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 30/7/2014.