மீறல்
மீறல், ஆங்கிலம் மாலதி ராவ், தமிழில் அக்களூர் இரவி, சாகித்ய அகாடமி, பக். 368, விலை 250ரூ.
இந்த நாவல் 2007ம் ஆண்டின் சிறந்த ஆங்கில நூலுக்கான விருதைப் பெற்றது. 1930 மற்றும் 1940களில் இருந்த சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல், அந்தக் காலப் பெண்கள் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அவல நிலையை வெளிச்சப்படுத்திக் காட்டும் ஓர் அற்புதச் சித்திரம். சுதந்திரப் போராட்ட காலத்தில்தான், இந்தியப் பெண்கள் தங்களுக்கான பொருளாதார சமூக விடுதலையைக் கனவு காணும் துணிச்சல் பெற்றனர். நாவலில் வரும் கதாநாயகி கமலா, கணவனால் புறக்கணிக்கப்பட்டவள். அவளால் தனக்குக் குழந்தை பெற்றுத்தர முடியவில்லை என்று, அவளது கணவன் அவளை நிராகரிக்கிறான். அவள் இளம் பருவத்தில் பாதியில் விட்டுவிட்ட கல்வியை, மீண்டும் தொடர்கிறாள். கல்லூரியில் சேர்ந்து இளம்கலை பயின்று, தன் வறண்ட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தேடிக்கொள்கிறாள். சொற்ப கதாபாத்திரங்களைக் கொண்டு, பன்னூறாண்டு ஆழமான பெண் அடிமைத்துவம், மனித சிந்தனையின் எல்லை விளிம்புகள், காதல், பிரிவு, துயரம், இழப்பு, மீட்பு என்று மனித வாழ்க்கையின் பல்வேறு நிறங்களை அப்பட்டமாக்கும் சிறந்த நாவல் இது. மொழிபெயர்ப்புத் தளத்தில் ஆர்வத்துடன், ஊக்கத்துடன் இயங்கி வரும் அக்களூர் இரவி, அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். -எஸ். குரு. நன்றி: தினமலர்,20/12/2015.