முப்பத்தி நாலாவது கதவு
முப்பத்தி நாலாவது கதவு, தமிழில் புல்வெளி காமராசன், அகநாழிகை பதிப்பகம், பக். 144, விலை 120ரூ.
அழகாக மொழிபெயர்க்கப்பட்ட இந்திய மற்றும் அயல்நாட்டு எழுத்தாளர்களின் 13 சிறுகதைகளின் தொகுப்பு. இதில் இரு பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் உலகத் தரமானவை. முதலாவதாக, மலையாள எழுத்தாளர் சீதா இரண்யனின், திருக்கச்சூர் எக்ஸ்பிரஸில் இடாலோ கால்வினோ. வேலையில்லாத, மணமாகாத, கனவுலகவாசி பேருந்தில் செல்லும்போது, அவன் அருகே அமரும் இளம் பெண் அவன் மீது தூங்கி விழுவதை அவன் உடன்பாடாகக் கருதி எல்லை மீறுவதும், தப்பியோடுவதும் கதை. மிகை இல்லாமல், பெண்ணியம் பேசாமல், அப்பட்டமாக ஒரு காட்சியை முன் நிறுத்துகிறார். அதையும் ஒருவகை சோக நகைப்புடன். சரி, தவறுகளை வாசகர்களே தீர்மானிக்கவிடுகிறார். அடுத்தது அசாமி எழுத்தாளர் நிருபமா பரக்கோஷனின் மகளே. இரண்டு முறை வெள்ளத்தால் பயிர், மாடு, மனை, மனைவி, மகன் எல்லாவற்றையும் இழந்து இனி கிராமத்தில் பிழைக்க வழியில்லை என்று தன் மகளுடன் வெளியேறும் விவசாயிக்கு, பார்வையும் மங்கிவிடுகிறது. பிச்சையெடுக்கிறார்கள். மகளின் விபசாரபேரங்களைக் கேட்டும் கேளாச் செவியனாய் வருந்துகிறான். ஒரு நாள் அவர்களைக் காண வரும் கிராமத்து இளைஞன் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. மகளை மணந்து கொள்வான், நாமும் கிராமத்துக்கு திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கை வருகிறது. அவனும் ஒரு பெண் தரகன் என்பதை அறியும்போது எல்லா நம்பிக்கைகளும் முறிந்துபோகின்றன. நல்ல மொழிபெயர்ப்பு. கதைகளுக்குள் நெருடல் இல்லாமல் நம்மால் செல்ல முடிகிறது. நன்றி: தினமணி, 1/3/2015.