வரும் போலிருக்கிறது மழை
வரும் போலிருக்கிறது மழை, மு. முருகேஷ், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, பக். 64, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-4.html
தன்னைச் சுற்றி இருப்பவை, நடப்பவை என்று எதையும் விட்டுவிடவில்லை முருகேஷ். அத்தனையையும் தன் கவிதைப் பொருளாக்கியுள்ளார். அதுவும் ஹைக்கூ வடிவத்தில். மழைவாசம் தொட்டு, விரிசல் சுவரில் விழும் விதைகள் வளர்வதுகூட அவரது ஹைக்கூ பயணத்தில் அடக்கம். ஆகாயத்தையும் வானத்தையும் அளக்க இவரது கவிதைத் தடம் போதும். அத்தனை விஷயங்கள். படிப்பவர் யாராக இருந்தாலும் அவரையும் அறியாமல், ஒரு ஹைக்கூ நாமும் எழுதிப் பார்ப்போமா என்று தூண்டும் ஒரு தூண்டல் கவிதைகளில் தெறிக்கிறது. தூக்கம் தின்ற இரவு குழாயடியில் இசைக்கும் சொட் சொட் சொட். நாம் அனுபவித்ததை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் படிமக்காட்சிகள் யாரையும் கவிதைப் ப்ரியராக்கிவிடும்.
—-
திரை வளர்த்த நான், நான் வளர்த்த திரை, மு. இராமசுவாமி, செம்பிபடைப்பகம், 20, இருளாண்டிக் காலனி, விராட்டி பத்து, மதுரை 10, பக். 448, விலை 400ரூ.
தமிழ்த் திரைப்படப் பயணத்தில் இது ஒரு புதிய பாதை. நூலாசிரியர் மு. இராமசுவாமி, 1972 முதல் 2012 வரையிலான 40 ஆண்டுகால தமிழ் சினிமாவின் போக்கை, வளர்ச்சியை, மாற்றத்தை, அதன் வீழ்ச்சியை, உயர்வை அவரது பார்வையில் பல்வேறு இதழ்களில் பல்வேறு தருணங்களில் பதிவு செய்திருக்கிறார். அவற்றின் ஒரு தொகுப்பு இந்நூல். தமிழ் சினிமாவைப் பற்றிய அதன் ஊடாக பிறந்து வளர்ந்து வந்த ஒரு விமரிசகனை அடையாளப்படுத்தும் பதிவாகியுள்ளது சிறப்பு. அவரது உள் மனதை உரசிச்சென்ற திரைப் பொழுதுகளின் ஒரு பகுதி இங்கே நூலாய் வடிவம் கொண்டுள்ளது. அவர் காலத்து திரைப்படங்கள், திரைக்கலைஞர்கள், திரை அரங்குகள், உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அதில் ஒரு பதிவாக்கியுள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 1/5/13.