விதைகள்
விதைகள், தொகுப்பு நூல், வெளியீடு: பூவுலகின் நண்பர்கள், ஏ2, அலங்கார் பிளாசா, 425, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10, விலை 70 ரூ.
இந்திய விவசாயத்தின் பேரழிவு பசுமைப் புரட்சிக்குப் பின் துவங்குகிறது. நவீன வேளாண்மை முறையும் உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகபட்ச உற்பத்தி என்ற மாயவலையின் மூலம் நமது இயற்கையான வேளாண் ஆதாரங்களை நிர்மூலமாக்கிவிட்டன. அகில உலக தாவர மரபியற் வளங்களுக்கான அமைப்பின் கீழ், பல்வேறு நாடுகள் மரபுக்கூறு வங்கிகளை அமைக்கின்றன. அவை அந்த நாடுகளிலிருந்து உயிர் ஆதாரங்கள் என்ற பெயரில் விதைகளைச் சேகரித்து தங்கள் வர்த்தக நலன்களுக்கு ஏற்ப மரபணு மாற்றங்கள் செய்து புதிய விதைகளை வடிவமைக்கின்றன. நமது மரபான விதைகள் படிப்படியாக அகற்றப்பட்டு, இந்தப் புதிய விதைகளை சாகுபடி செய்யும்படி விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இந்த வகை விதையிலிருந்து வளரும் பயிர்கள் மாட்டுத் தீவனம் போன்ற பயன்பாடுகளுக்கு உதவாதவை. விதைகளுக்குப் பின்னே இருக்கும் பொருளாதாரத்தையும் அரசியலையும் விரிவாக அலசும் இந்த நூல், ஒரு நாட்டை ராணுவ ரீதியாக கைப்பற்றுவதைவிட ஆபத்தானது அதன் விதைகளைக் கைப்பற்றுவது என்ற எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகிறது. நன்றி: குங்குமம் 05-11-2012