கொங்கு மணம் கமழும் படைப்புகள்
கொங்கு மணம் கமழும் படைப்புகள், டாக்டர் நல்ல பழனிசாமி, தமிழ்ப் பண்பாட்டு மையம், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகம், காளப்பட்டி சாலை, கோவை 641048, பக். 328.
தமிழுக்கு வளம் சேர்ப்பதில் கொங்க நாட்டின் பங்கு மிகவும் அதிகமாகும். கவிதை, நாவல், சிறுகதை, கலைத்துறைகளில் கொங்கு படைப்பாளர்கள் உச்சத்தில் நின்றுள்ளனர். நெல்லை வட்டார, மண் வாசனையைத் தன் வாசகர் படித்து நுகரும் வகையில் வழங்கியவர், சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன். இதுபோல நாஞ்சில்களில், தஞ்சை, மதுரை, சென்னை வட்டார வழக்குகளையும், அந்தந்த படைப்பாளிகளின் நடையில், படித்து நுகரலாம். இந்த ஆய்வு நூல், கொங்கு தமிழ்ப் படைப்பாளிகளின் மண்நேசத்தை மதிப்புறு வகையில் 15 ஆய்வுக் கட்டுரைகளாகத் தந்துள்ளது. கொங்கு தமிழைப் பற்றிச் சொல்லும்போது, மலையளவு மரியாதை, அடிக்கரும்புச்சுவை, வெல்லக்கட்டிகளால் சொற்குவியல் என்று படுகளம் நாவலாசிரியர் ப.க.பொன்னுசாமி எழுதியுள்ளார். தமிழகத்தில் காணாமல் போய்விட்ட 1500 கிராமங்களின் ஊடே, கொங்குமார் சிற்றூர்களில் நடக்கும் கேளிக்கை சம்பிரதாயம், நம்பிக்கைகளை கவிஞர் சிற்பியின் கவிதைகளில் தேடிக்காணும் கட்டுரை, மிக அற்புதம். காங்கிரீட் நாகரிகத்தின் கவியல்ல நான், காடுகளின், ஆறுகளின், மலைகளின் கவி என்று கவிஞர் சிற்பி போடுவதே, கொங்கின் தனி முத்திரை ஆகும். கொங்கு மணம் கமழும், தங்கத் தமிழ் ஆய்வு நூலிது. -முனைவர் மா.கி. ரமணன்.
—-
காங்ரெஸ் வினா விடை, பெ. சு. மணி, பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு, மயிலாப்பூர், சென்னை 600004, பக். 368, விலை 160ரூ.
இது, தமிழ் அரசியல் இலக்கியத் துறைக்கு, ஒரு முக்கியமான பங்களிப்பு. இந்தியாவில் விடுதலைக்கு போராடி, அதிலே மகத்தான வெற்றி கண்ட பெருமை, காங்கிரஸ் மகா சபைக்கு உண்டு. தேசிய அரசியலில், பால பாடத்தை எளிய தமிழில் எடுத்துச் சொல்லும் அருமையான நூல். ஆங்கிலம் படித்த இந்தியர், மத்திய பிரதேச மொழி எந்த அளவுக்கு புறக்கணிக்கப்பட்டு இருந்தது என்பதையும் நூலாசிரியர் காட்டுகிறார். வரலைற்று நிகழ்வுகளை சிறப்பாக தொகுத்து அளிக்கிறார். -எஸ். குரு. நன்றி: தினமலர், 2/2/2014.