ராஜாஜியின் கருத்துக்கள்
ராஜாஜியின் கருத்துக்கள், ராஜாஜி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 176, விலை 70ரூ.
20 ஆம் நூற்றாண்டின் ‘இந்திய அரசியல் ஞானி’ என்று பாராட்டப்பட்டவர் சக்கரவர்த்தி சி. ராஜகோபாலாச்சாரியார். விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்திக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்பையும் வகித்தவர். பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்பழுக்கற்றவராகத் திகழ்ந்த இந்த மூதறிஞரின் கருத்துக்கள், தொலைநோக்குக் கொண்டவை. 1970-71ல் மத்தியிலும், மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் நிகழ்ந்த பல்வேறு பிரச்னைகள், சம்பவங்கள் குறித்து இவர் கூறிய கருத்துகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியாகின. அவற்றின் தொகுப்பே இந்நூல், இந்தியாவிற்கு ஏற்றது ஆலைத் தொழிலோ, விவசாயத் தொழிலா; மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்தது சரியா; பங்களாதேஷை அங்கிகரித்தது; முஸ்லிம்கள், ஹரிஜனங்களைப் பற்றி; காஷ்மீர் பிரச்சினை; மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள்; பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் செயல்பாடுகள்; உலக நடப்புகள்; சமயத் தத்துவங்கள் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து ராஜாஜி தனது கருத்துகளாக சுருக்கமாகக் கூறியவை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த மாமேதையின் சிந்தனைகள், இன்றளவும்கூட பொருத்தமானவையாகவே இருப்பதை இந்நூலை படிக்கும்போது உணர முடிகிறது. -பரக்கத். நன்றி: துக்ளக், 1/4/2015