விடுதலைக்கு முன் தமிழ்இலக்கிய வளர்ச்சி
விடுதலைக்கு முன் தமிழ்இலக்கிய வளர்ச்சி (1900 – 1930) முதல் பாகம், அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், பக்.270, விலை ரூ.250.
கடந்த நூற்றாண்டின் தொடக்கமான 1900- இல் இருந்து1930வரைகவிதை, சிறுகதை, நாவல்,நாடகம், ஊடகம்,கட்டுரை, பதிப்புத்துறை ஆகியவற்றில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்களை, வளர்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது .
பாரதியாரின் “தனிமையிரக்கம்’ 1904 – ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. அக்காலகட்டத்தில் வழிநடை உப்புமா பாட்டு, தனிப்பாசுரத் தொகை,வருண சிந்தாமணி, சங்கிரக இராமாயணம், அருணாசல புராணம் போன்ற கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
வ.வே.சு.ஐயரின் “குளத்தங்கரை அரசமரம்’ இக்காலகட்டத்தில் வெளிவந்த குறிப்பிடத்தக்க படைப்பாகிறது. மாதவையாவின் “குசிகர் குட்டிக்கதைகள்’, பாரதியாரின் “சின்னசங்கரன் கதை’, “சந்திரிகையின் கதை’,கல்கியின் “சாரதையின் தந்திரம்’, செல்வ கேசவராய முதலியாரின் “அபிநவக்கதைகள்’ ஆகியவை இக்காலகட்டத்தில் சிறுகதை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவையாகும்.
வை.மு.கோதைநாயகி அம்மாள், அ.மாதவையா, ச.ம.நடேச சாஸ்திரி, கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தமிழ் நாவல் வளர்ச்சியிலும், சங்கரதாஸ் சுவாமிகள், வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார், எஸ்.வி.கள்ளப்பிரான் பிள்ளை, வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார், தி.இலக்குமணன் பிள்ளை, வே.பூதலிங்கம் பிள்ளை உள்ளிட்டோர் நாடகத்துறையிலும் தங்களுடைய பங்களிப்பை இக்காலகட்டத்தில் செய்திருக்கிறார்கள்.
1898 – இல் தமிழின் முதல் நாளிதழாக சுதேசமித்திரன் வெளிவந்திருக்கிறது. அதற்கு பிந்தைய காலகட்டத்தில் தமிழ்மாது, இந்தியா, சக்ரவர்த்தினி, ஒரு பைசாத் தமிழன், விஜயா, லோகோபகாரி, பூலோகவியாஸன், ஞானசாகரம், திராவிடன், தேசபக்தன், நவசக்தி, செந்தமிழ்ச் செல்வி உள்ளிட்ட பல இதழ்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்திருக்கின்றன.
திரு.வி.க., நாவலர் சோமசுந்தரபாரதியார், மு.இராகவவையங்கார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆகியோரின் நூல்கள் இக்காலகட்டத்தின் குறிப்பிடத்தக்க பதிவுகள். இதுபோன்று பதிப்புத்துறை முன்னோடிகளைப் பற்றிய விவரங்களும் இந்நூலில்அடங்கியுள்ளன.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் கலை, இலக்கியம்,அறிவுசார்ந்த முயற்சிகளைப் பற்றிய சிறந்த பதிவாக இந்நூல் உள்ளது.
நன்றி: தினமணி, 6/9/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818