சிலப்பதிகாரமும் செந்தமிழ்க் காப்பியங்களும்
சிலப்பதிகாரமும் செந்தமிழ்க் காப்பியங்களும், க. கண்ணகி, தமிழ் ஐயா வெளியீட்டகம், ஔவைக் கோட்டம், திருவையாறு 613 204, பக். 472, விலை 340ரூ.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து, திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் 2012 ஜுலை திங்களில் நடத்திய அனைத்துலக அளவிலான காப்பியத் தமிழ் பத்தாவது ஆய்வு மாநாட்டின் கருத்தரங்கத்தில், அறிஞர்களால் வாசிக்கப்பட்ட 95 கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிலம்பில் சிகரங்கள் என்ற தலைப்பில் முப்பது ஆய்வுக் கட்டுரைகளும், சிலம்பில் புதுமை என்ற தலைப்பில் இருபது ஆய்வுக் கட்டுரைகளும், காப்பியத் தமிழ் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பதின்மூன்று கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. நம் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம், ஏனைய காப்பியங்களை விட, இன்றைய உலகில் அதிகமாய் அறியப்பட்டதுமான நூற்றுக்கணக்கான ஆய்வு நூல்களும், திறனாய்வு ஒப்பீடு விரிவாக்கம் நாட்டிய நாடக அமைப்பு என, பல வடிவங்களில் இலக்கிய உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தலைப்புகளில் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் கட்டுரைகளை தேர்ந்தெடுத்து தொகுப்பாசிரியர் தயாரித்து தந்துள்ளார். இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் படித்து மகிழ வேண்டிய சிலப்பதிகார கோவை இந்நூல். -குமரய்யா.
—-
அனுபவங்களின் நிழல் பாதை, ரெங்கையா முருகன், வி.ஹரி சரவணன், வம்சி புக்ஸ். To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-3.html
இந்திய பழங்குடிகள் சிலவற்றின், சடங்குகள் மற்றம் வழக்காறுகளைப் பதிவு செய்யும் தேசிய நாட்டுப் புறவியல் உதவிமையத் திட்டத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய ரெங்கையா முருகன் மற்றம் ஹரி சரவணனின் அனுபவ நூல் இது. இன்று உலகமயமாக்கலில் அரசும் பெருநிறுவனங்களும் பழங்குடிகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து வெளியேற்றி வரும் நிலையில், பாலை, பனி, நதிக்கரை, அடர்வனம் யாவும் ஏழாண்டுகள் அலைந்து, பழங்குடி மக்களின் பண்பாட்டு அடையாளங்களை இந்த நூலில் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் திராவிடப் பழங்குடிகளின் பண்பாடு, இன்னமும் வட இந்தியாவில் வாழும் பழங்குடிகளிடம் இருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த நூலை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகத்தில் படித்து பயன்பெறலாம். நன்றி: தினமலர், 20/10/2013.