சீதாவின் பதி
சீதாவின் பதி, யத்தனபூடி, சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 312, விலை 250ரூ.
இல்லற வட்டத்திற்க வெளியில், ஒரு பெண் சிநேகிதியை தேடிக்கொள்ளும் கணவன்மார்கள், எத்தனை அவஸ்தைகளுக்கு ஆளாகின்றனர் என்பதைச் சொல்லும் நாவல் இது. வித்யாபதி, இந்திரா ஆகியோர், ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். சூழ்நிலையால், பெற்றோர் நிச்சயித்த சீதாவை மணம்புரிகிறான் வித்யாபதி. ஆனால், வித்யாபதியால் இந்திராவை மறக்க முடியவில்லை. இந்திராவாலும் வித்யாபதியை மறக்க முடியவில்லை. சீதா, தான் கணவனின் முதல் காதலைப் பற்றி, திருமணம் ஆன அன்றே தெரிந்து கொள்கிறான். இந்திரா, வித்யாபதியிடம், “உன்னால் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள முடியுமா, முடியாதா? முடியும் என்றால், நாம் எங்கேயாவது போய், கோவிலில் கல்யாணம் செய்து கொள்வோம். நாம், நம்மைப் பற்றி மட்டுமே யோசிப்போம்” என்றாள். (பக். 176) ஆனால், சீதா ஒரு கார் விபத்தில் சிக்கிக் கொண்டதும், தன் மனைவியின் பால் அதிகமாக ஈர்க்கப்படுகிறான் வித்யாபதி. கல்யாணத்திற்கு பின், இல்லற வட்டத்திற்கு வெளியே இன்னொரு பெண் தேவை இல்லை என்ற முடிவுக்கு வருகிறான். இந்திரா, வித்யாபதி, சீதா இம்மூவரின் மனப்போராட்டங்களையும், உள்ளம் உருகும் வகையில் சித்தரிக்கிறார் நாவல் ஆசிரியை. தமிழ் மொழிபெயர்ப்பு மிக அருமை. -எஸ். குரு. நன்றி: தினமலர், 13/3/2016.