வீரக்கதைப் பாடல்கள்
வீரக்கதைப் பாடல்கள், எம்.எம்.மீறான் பிள்ளை, சேகர் பதிப்பகம், பக். 152, விலை 110ரூ.
போர்க்களத்தில் வீர முழக்கமிடும் ஒன்போது நாடோடிப் பாடல்களை ஆய்கிறது நூல். இரவிக்குட்டிப் பிள்ளைப் போர், கான் சாகிபு சண்டை, தம்பிமார் கதை, இராமப்பய்யன் அம்மானை ஆகிய நான்கும், தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னால் எழுந்த வீர நிகழ்ச்சி போர் பாடல்கள். காசீம் படைப்போர், அலியார் படைப்போர், சைத்தூன் கிஸ்ஸா, சக்கூன் படைபபோர், மலுக்கு மலுக்கு ராஜன் கதை ஆகிய ஐந்தும் முஸ்லிம் பெயர் பூண்ட போர் பாடல்கள். வீரச்சுவை எல்லாவற்றிலும் விரவிக் கிடக்கின்றன. ஏழு கடலுக்கு அப்புறத்தே இரும்பு அறைக்குள் இருந்தாலும், எமதூதருடன் ஆள் வந்தால் இல்லை என்றால் போவாரோ? மரணத்தை விமர்சிக்கும் மதிப்பான பாடலிது. போரிலும், சாவிலும் தமிழர் காட்டிய வீரம், பாடல்களில் பதிவாகி உள்ளது. ஆலம் விழுது போல் அந்தப் புள்ளை தலைமயிரு தூக்கி முடிஞ்சால் என்ன தூக்கணத்தின் கூடுபோல? ஆலம் விழுது போன்று தொங்கும் கூந்தலை, தூக்கணாங்குருவிக்கூட போல் கட்டச் சொல்லும், உவமை மிகவும் நயமானது. பழமொழி, உவமைகள், நாட்டுப்புற இலக்கியத்திலும் நிரம்பிக் கிடக்கின்றன. வீரத்தில் வெளிப்படும் சோகத்தையும், இனிய நாட்டுப்புறப் பாட்டாக, நயமுடன் ஆய்வு செய்கிறது இந்த நூல். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 1/2/2015.
—-
வேதபுரத்து நாயகிகள், கணபதிராமன், வெர்சோ பேஜஸ், புதுச்சேரி, விலை 100ரூ.
வேதபுரம் என்று பாரதியாரால் போற்றப்பெற்ற புதுச்சேரியின் 33 தாய்த் தெய்வங்கள் பற்றி எழுதப்பட்ட நூலாகும். அத்துடன் தமிழர்களின் பண்பாடு இன்றும் கிராமங்களில் தான் வாழ்கின்றன என்ற கருத்தை ஆணித்தரமாக நூலாசிரியர் கூறியிருப்பது, நூலுக்கு மேலும் சிறப்பை அளிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 4/2/2015.