சோசலிச சமுதாய மேதைகள்
சோசலிச சமுதாய மேதைகள், அ,சா. குருசாமி, சுரா பதிப்பகம், 1620 ஜே பிளாக், அண்ணா நகர், சென்னை 40, விலை 90ரூ.
சோசலிச தத்துவார்த்த மரபில் குறிப்பிடத்தக்க, மூவரான ஸன் யாட் சென், காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் நூல். இது தத்துவார்த்த நூல் இல்லை என்றாலும் தத்துவ அறிஞர்களின் வாழ்க்கை எளிய நடையில் விவரிக்கும் நூல் இது. நன்றி: இந்தியாடுடே, 13/3/2013.
—-
குறுந்தொகை, இலந்தையடிகள் வித்துவான் இராச. சிவ. சாம்பசிவவர்மா(1934-37), பதிப்பும் ஆய்வும்- இரா. அறவேந்தன், காவ்யா பதிப்பகம், சென்னை 24, பக். 224, விலை 175ரூ.
எட்டுத்தொகை நூல்களுள் அகப்பொருள், சுவை ததும்பும் இலக்கியமான குறுந்தொகை பூரிக்கோ என்பவரின் வேண்டுகோளால் தொகுக்கப்பட்டது. கடைச்சங்க காலத்திய நூலான இதல் 205 புலவர்கள் பாடிய 400 பாடல்கள் உள்ளன. இந்நூலுக்கு பேராசிரியர் (20 பாடல்களுக்கு மட்டும்), நச்சினார்க்கினியர் (அவ்விருபது பாடல்களுக்கு), உ.வே.சா. சௌரிப் பெருமாள் அரங்கசாமி ஐயங்கார், கலாநிலையம் இராமரத்தின ஐயர் போன்றோர் உரை எழுதியுள்ளனர். முதன் முதலாக 1915ஆம் ஆண்டு திருக்கணபுரம் சௌரிப்பெருமாள் அரங்கசாமி என்பவர்தான் குறுந்தகையைப் பதிப்பித்துள்ளார். அன்றிலிருந்து இன்று வரை இருபதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளதாகத் தெரிகிறது. சிறந்த தமிழாசிரியராகவும், உரையாசிரியராகவும், திறனாய்வாளராகவும் விளங்கிய இராச. சிவ. சாம்பசிவசர்மா எழுதிய உரை செந்தமிழ்ச் செல்வி இதழில் 1934இல் இருந்து 1937 வரை வெளிவந்துள்ளன. அதில் 50 பாடல்களின் உரைகளை மட்டும் தொகுத்து பதிப்பித்திருக்கிறார் அறவேந்தன். பாட வேறுபாடு, (பேதங்கள்) ஒப்பீட்டு வகைப்பாடு, பிரதி பேதங்கள், பதவுரை, அணி விளக்கம், அருஞ்சொற்பொருள், மேற்கோள் விளக்கம், இராச. சி. சாம்பசிவசர்மா பற்றிய குறிப்புகள், அவர் எழுதிய கட்டுரைகள், நூல்கள் போன்றவற்றையும் இணைத்துள்ளார். காவ்யாவின் அரிய நூல்களின் பட்டியலில் இந்த அரிய உரை நூலும் சேர்ந்திருக்கிறது. நன்றி: தினமணி 4/3/2013.