பாமரன் பார்வையில் கம்பர்
பாமரன் பார்வையில் கம்பர், அந்தமான் கிருஷ்ணமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 268, விலை 110ரூ.
பாமரரையும் கவர்ந்திழுக்கும் நூலின் தலைப்பு போலவே உள்ளிருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் யாவரையும் படிக்கத் தூண்டும் வகை. காக்கா பிடிக்கலாமா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை? மாத்தி யோசி மாமூ, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை, முத்துக்குளிக்க வாரீயளா?, அடைந்தால் மஹாதேவன் இல்லையேல் மரணதேவன், என்னெக் கணக்குப் பண்னேண்டா, எப்படி இருந்த நான்…, கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்திலையும், மலரே குறிஞ்சி மலரே, பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா, பாசக்காரப் பயலுவ, உலக நாயகனே… இவையெல்லாம் அடிக்கடி கேட்கும் திரைப்பட சொற்றொடர்களாயிற்றே என்று நினைக்க வேண்டாம். தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றை அதாவது, கம்ப காவியத்தில் உள்ள பாடல்களை இதனோடு தொடர்புப்படுத்தி நகைச்சுவையோடு பாமரருக்கு விளங்கும்படி கொச்சைத் தமிழில் கொண்டு சென்றிருக்கிறார் நூலாசிரியர். நன்றி: தினமணி, 14/7/2014.
—-
நெப்போலியன் ஹில் வரம் பெற்ற வாழ்க்கை, தமிழில் அகிலன்-கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 308, விலை 200ரூ.
நெப்போலியன் ஹில் அமெரிக்காவின் பொக்கிஷம். லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்குள் ஒளிந்துகிடக்கும் மகத்தான திறமைகளைக் கண்டுபிடிக்க உதவியதுடன், அவர்களின் சாதாரண வாழ்க்கைப் பயணத்தை திசை திருப்பி செல்வவளம் மிக்க வெற்றிப் பாதையாக மாற்றிக்காட்டியவர். அவரது வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி மற்றவர்களும் அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் மைக்கேல் ஜே.ரிட், ஜுனியரும், கிரிக் லாண்டர்ஸிலும் சேர்ந்து எழுதிய வாழ்க்கை வரலாறு நூல் இது. அவரது மனம் தரும் பணம் ஒரு மின்சாரத்தாக்கம்போல் பலரது வாழ்வை வெற்றிகரமாக மாற்றியமைத்திருப்பது உள்ளிட்ட வெற்றிக்கான பல தூண்டுகோல்கள் நூலில் உண்டு. நன்றி: குமுதம், 16/7/2014.