மனநலம் தெரிந்து கொள்வோம்
மனநலம் தெரிந்து கொள்வோம், டாக்டர் சி. பன்னீர்செல்வன், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 100ரூ.
மனிதனுக்கு ஏற்படும் மனநோய்கள், அவற்றுக்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை கொண்ட நூல். நூலின் ஆசிரியர் மன நல மருத்துவர் என்பதால் மனநோயாளிகளை கையாள வேண்டிய வழிமுறைகளையும் சிறப்பாக விளக்கியுள்ளார்.
—-
காற்றுவாக்கிலே, கவிஞர் காற்று (எ) கலைவாணி கிருட்டிணன், கீதா பதிப்பகம், அஞ்சல்பெட்டி 2985, டாடாபாத் அஞ்சல், கோவை 12, விலை 60ரூ.
118 கவிதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி 16/10/2013.
—-
சைவ சமயக் கலைக்களஞ்சியம் தொகுதி 9, முனைவர் இரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை (10 தொகுதிகளும் சேர்த்து மொத்த விலை ரூ. 15,000.
சைவ சமய அமைப்புகள் மடங்கள், ஆதீனங்கள், மன்றங்கள், சபைகள், வேத ஆகம தேவார பாடசாலைகள், ஓதுவார்கள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொண்டர்கள், நூல்கள், இதழ்கள் என, ஒன்றுவிடாமல், 990 செய்திகள் இவ்வொன்பதாம் தொகுதியின், 628 பக்கங்களில் பதிவாகியுள்ளன. பெரிய நூலகங்களில் அமர்ந்து பல நாள் நூற்றுக்கணக்கான நூல்களையும், விழாமலர் போன்றவற்றையும் புரட்டிப் புரட்டிப் படித்தாலும் தெரிவதற்கரிய, 600 ஆண்டுகால சைவ வரலாற்று செய்திகளை இவ்வொரு தொகுதியைக் கொண்டே அறியலாம். திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், மதுரை, குன்றக்குடி முதலான பழமையான சைவ ஆதீனங்கள் பதினெட்டு மயிலம் பேரூர் முதலான வீர சைவ ஆதீனங்கள் பன்னிரண்டு, கோவை சிரவை ஆதீனம் ஆகிய கவுமாரமடம், காஞ்சிபுரம் காமகோடி மடம், காரைக்குடியில் உள்ள கோயிலூர் ஆதீனம் ஆகிய இரு பெரும் வேதாந்த மடங்கள் ஆகிய அனைத்தின் வரலாறுகளும் பணிகளும் அழகான வண்ணப் படங்களுடன் முழுமையாகப் பதிவாகியுள்ளன. அண்மைக்காலத்தில் தோன்றி வளர்ந்து வரும் அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன. அவ்வக்காலத்தில் வெளிவந்து சைவம் பரப்பிய இதழ்கள், பரப்பி வரும் இதழ்கள் பல. ஏறத்தாழ 150 சைவ இதழ்கள் இத்தொகுப்பில் குறிப்பிடப் பெற்றுள்ளன. பண்ணிசையால் சைவம் வளர்த்தவர்கள், சைவம் பரப்பியவர்கள், ஓதுவார்கள், அக்னி ஓதுவார் பரம்பரை என்று ஒரு ஓதுவார் பரம்பரையே இருந்த தகவல், அடங்கன் முறை அருணாசல தேசிகர் என்ற ஓதுவா மூர்த்திகளுக்கு அடங்கன் முறை (மூவர் தேவாரம்) முழுவதும் மனப்பாடம், தருமபுரி சுவாமிநாதன் உலகப் புகழ் பெற்ற ஓதுவார். இப்படி ஏராளமான தகவல்கள் உள்ளன. பின்னிணைப்பாக உள்ள செயல்முறை ஆவணம் சைவத்தின் வருங்கால வளர்ச்சிக்கு அடிகோலுவது ஆகும். சுதந்திர இந்தியாவின் முதன் முதலில் கலைக்களஞ்சியம் வெளியிடப் பெற்ற மொழி தமிழ்தான். வெளிட்டதும் தமிழ்நாடு மாநிலம் தான். அப்பெருமை முழுவதம் அன்றைய கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கம் செட்டியாரையே சாரும். அது பொதுக்கலைக் களஞ்சியம். அதன் பின் அவ்வளவு பெரிய அதே அளவில் பத்துத் தொகுதிகளாகச் சைவ சமயத்திற்கு என்று ஒரு கலைக்களஞ்சியத்தை தயாரித்து வழங்கிய முனைவர் இரா.செல்வக்கணபதியின் பணி பெருமைக்குரியது. எல்லா வகைக் கல்வி நிறுவனங்களிலும், தனியார் துறை நூலகங்கள், எல்லா நூலகங்களிலும் இத்தொகுதிகள் இடம் பெற வேண்டும். திருமணம் போன்றவற்றில் வழங்க வேண்டிய சீதனம் எனலாம். சைவத்தமிழ் அற்புதம் எனலாம். -தவத்திரு. ஊரன் அடிகள். நன்றி: தினமலர், 13/10/2013.