இறுதிச் சொற்பொழிவு
இறுதிச் சொற்பொழிவு, மஞ்சுள் பப்ளிக் ஹவுஸ், 7/32, அன்சாரி ரோடு, தர்யாகஞ்ச், புதுடெல்லி 110002, விலை 199ரூ.
அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழக கணினி துறை பேராசிரியர் ரேண்டி பாஷ் அழகான மனைவி, 3 இளம் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவருக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது திடீரென தெரியவருகிறது. வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்தாலும் ரேண்டிபாஷ் துவண்டுவிட வில்லை. தன் மனைவி குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இருந்து செய்யக்கூடியவற்றை குறைந்த நாட்களிலேயே செய்ய முனைகிறார். இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் இறுதிச் சொற்பொழிவு ஆற்ற அவருக்கு அழைப்பு வருகிறது. தாங்கள் இறந்து போவதற்கு முன்பு கடைசி முறையாக மாணவர்களிடம் ஒரு உரை நிகழ்த்த வாய்ப்பு அளிக்கப்பட்டால் எதை பேச விரும்புவார்களோ அதை பேசுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுதான் இறுதிச் சொற்பொழிவு ஆகும். இதன்படி ரேண்டிபாஷ் ஆற்றிய உரையின் தொகுப்புதான் இந்த புத்தகம். 46 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. 50 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்து உள்ளது. தமிழில் நாகலட்சமி சண்முகம் அழகாக மொழிபெயர்த்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 9/10/13.
—-
என் இனிய இந்து மதம், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை 600017, பக். 104, விலை 45ரூ.
இந்து மத வாழ்வியலைத் துல்லியமாக ஆராய்ந்து, பண்பாடு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு மரபுகள், சடங்குகள் போன்றவற்றின் சிறப்புகளைப் பொருள் பொதிந்த கண்ணோட்டத்துடன் விவரித்துள்ளார் இந்திரா சவுந்தர்ராஜன். மார்கழி, தை மாதச் சிறப்பு, சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி பற்றிய விளக்கம், திருமணம் மற்றும் காது குத்து போன்ற நிகழ்வுகள் கடவுளுக்கு ஏன் கல்யாணம் ஆகியவற்றுக்கான விளக்கங்கள் சிந்தனைக் கிளர்வுக்கு அடித்தளமிடுகின்றன. நன்றி: தினமலர், 8/9/13